tamilnadu

img

‘ஊசலாடும்’ சிறு-குறுந் தொழில்களின் எதிர்காலம்

இந்திய பொருளாதாரத்திற்கு பங்களிப்பதில் தமிழகத்தின் சிறு குறுந் தொழில்கள் இரண்டாம் இடத்தில் உள்ளது. பதிவு செய்யப்பட்ட 20 லட்சம் உட்பட சுமார் 50 லட்சம் சிறு குறுந்தொழில்கள் உள்ளன. மத்திய அரசு பணி மதிப்புமிக்க நடவடிக்கையால் இந்தத் தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ஜிஎஸ்டி, பிஎஸ்-6 தொழில் நுட்ப மாற்றத்திற்கான நடவடிக்கைகளால் சிறு குறு தொழில்கள் அழிந்து விட்டன. மிச்சம் கொஞ்ச நஞ்சம் இருந்ததையும் கொரோனா ஊரடங்கு முற்றிலும் நாசமாக்கி விட்டது. இதனால் நாடு முழுவதும் சிறு குறுந்தொழில்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. இதை ஒப்புக் கொண்ட இத்துறையின் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியோ அத்தோடு சரி... வாயை மூடிக் கொண்டார். இத்தொழிலை காப்பாற்ற வேண்டும் என சிறு குறு தொழில் நிறுவனங்களை சார்ந்த தொழிற் சங்கங்கள் அனைத்தும் மத்திய அமைச்சருக்கு கோரிக்கை வைத்தும், போராடியும் அழிவின் உச்சத்தில் உள்ள சிறு குறுந்தொழில்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தொழிலை மேம்படுத்துவது, புணரமைப்பது குறித்து அமைக்கப்பட்ட உயர் மட்டக்குழுவிலும் டான்ஸ்டியா உட்பட சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டது. அதற்கும் போராடிய பிறகே அக்குழுவில் இடம் கிடைத்துள்ளது. ஆனாலும், சமூக மேம்பாடு தேச அக்கரையுள்ள  சங்கங்க ளுக்கு அழைப்பு இல்லை.

இந்நிலையில் உயர் மட்ட குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய அரசு, 3 மாத கால அவகாசம் கொடுத்துள்ளது. இதுவும் மத்திய அமைச்சர் கூறியது போலவே அவசர சிகிச்சை பிரிவு நோயாளிக்கு 3 மாதம் கழித்து செய்யப்படும் வைத்தியம் எப்படி எந்த பலனும் அளிக்காதோ அதைப் போன்று ஒரு பிரேத பரிசோதனை அறிக்கையாகத்தான் இருக்கும். எனவே, உடனடியாக இடைக்கால அறிக்கை ஒன்றை பெற்று சிறுகுறுந் தொழில்களுக்கு புத்துயிர்ப்பு அளிக்க வேண்டும் என்பது தொழில் முனைவோரின் கோரிக்கையாகும். அடிமட்ட வேலைகள் செய்வோர் எண்ணிக்கை 31.6 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு 1.6 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக இவ்வேலைகளை செய்து வந்த வெளி மாநில ஒப்பந்த தொழிலாளர்கள் இப்போது அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். தொழிற் சாலைகள் திறந்தால் கூட ஆட்கள் பற்றாக்குறையால் உற்பத்தி நடக்காது. வேலை இழப்போர் மற்றும் அழிந்து போகும் தொழில்கள் எண்ணிக்கை மிகக் கமையாக உயர்ந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில், பெரு நிறுவனங்களுக்கு ரூ.2,15,000 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்த மத்திய பாஜக அரசு,சிறு குறுந் தொழில்களுக்கு கையை விரித்து விட்டது. இச் சூழலில் தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஊரடங்கு காலத்திற்கு 20 சதம் மின் கட்டணம் செலுத்தினால் போதும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் தமிழக மின் வழங்கு நிறுவனம் 90 சதம் கட்டணத்தை மே11-க்குள் கட்ட வேண்டும் என்கிறது. கட்டாத காலத்துக்கு தண்டம் போடுமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது. இது குறித்து தமிழகத்தின் அனைத்து சிறு குறுந் தொழில்களின் கூட்டமைப் பான டான்ஸ்டியா மாநிலத் தலைவர் அன்புராஜன், பொதுச் செயலாளர் `இந்து நாதனிடம் கேட்ட போது, “சிறு குறுந்தொழில்கள் அழிந்துள்ளதால் தடை காலத்திற்கு மின்  கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றனர்.

சிறுகுறுந் தொழில் நிறுவனங்கள் உயிர் பிழைக்கவே வேண்டு மென்றால் ஊசலாடும் நிலையில் தொழிலாளர்களுக்கு தடை கால ஊதியம் வழங்க பல மாநிலங்களில் போல வங்கிக் கடன் பெறவும், அதற்கான வட்டியை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். இஎஸ்ஐயின் கை இருப்பில் உள்ள யாரும் திருப்பி கேட்காத 48 ஆயிரம் கோடியை உறுப்பினராக உள்ளவர்களுக்கு 50 சதவீத சம்பளத்தை இஎஸ்ஐ மூலம் தர உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஊரடங்கால் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதால், தொழில் முனைவோர்களுக்கு பெரும் நிறுவனங்களிலிருந்து வர வேண்டிய பெரும் தொகை கடந்த ஓராண்டாக சிறிதும் கிடைக்கவில்லை. பிற நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய உற்பத்தி பொருள்கள் கொடுக்க முடியாமல் லட்சக்கணக்காகான ரூபாய் முடங்கி கிடப்பதால் கடும் கடன் சுமையில் உள்ளனர்.     எனவே ஜிஎஸ்டி உட்பட அனைத்து கட்டணங்கள், உரிமங்கள், தொழிற் கடன்களுக்கான தவணைகள், வரிகள் செலுத்துவதற்கான காலக் கெடுவை கொரோனா முடிவுக்கு வரும் வரை தள்ளிப் போட வேண்டும். கட்ட வேண்டிய தவணைகளுக்கு தள்ளிப்போடும் காலக்கெடுவுக்கு பின் தவணைக்கு வட்டியும், வட்டிக்கு வட்டியும் கணக்கிடு வதை கைவிட வேண்டும் எனவும் சங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

-ஒய். சந்திரன்